வியாழன், 10 ஜூன், 2021

துளிர்க்கும் மனிதம்..!



சாம்பலான
மரக்கட்டைகளூடே
துளிர்த்த இலைகளைக்
கண்ட நான்
குதூகலிக்கிறேன்!
என்றோ யாராலோ
உருவப்பட்டு
சருகாகி மணல்மீது
கிடத்தப்பட்ட
இலைகளை
நினைத்து
வருந்தியிருக்கிறேன்!
இலைகளற்ற
மொட்டை கிளைகள்,
சூரிய ஒளித்துகள்களை
தனியாய்
தாங்கி நிற்பதை
நினைத்து
கன்னங்கள்
நனைத்திருக்கிறேன்!
ஒரு பின்பனிகால
காலையில்
அக்கிளைகளும்
வெட்டப்பட்டதை,
என்னை சுற்றிய
மனித கூட்டத்தின்
கூச்சலில்
புரிந்துகொண்டு
வெம்பியிருக்கிறேன்!
அன்று மாலையே,
வெட்டப்பட்ட
பட்டமரக்கிளைகள்
யாவும்
என்மீது கிடத்தப்பட்டு
மரங்களுடன்
மரங்களாய்
எரிக்கப்படுவதை
கண்ணீர் காய்ந்த
கண்களின் வழி
கண்டும்காணாமலும்
காலம் கடத்தியிருக்கிறேன்!
சரியாய்
ஐந்தாறு நாட்களே
கடந்திருந்தபொழுது
'நெல்லு வீடுவர நேரத்துல
பெஞ்சி கெடுத்திடுச்சே
இந்த எலவு மழ' -
என்ற குரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன்
என்தலையிலிரு
இலைகளுடன்,
யாரோ புண்ணியவான்
இட்ட உரத்தினாலும்
பெய்த மழையினாலும்!

-சகா..

11/02/2020 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக