வியாழன், 2 ஏப்ரல், 2026

மனிதர்களும் துளிர்க்கிறார்கள்..

மேகத்தைப் பிழிந்து

கடைசி பனித்துளியை

பெய்கிறது வானம்..

முன்னதாகவே பூத்து

தங்கள் கூட்டத்தை

தட்டியெழுப்புகிறது பூ..

நேற்றுவரை உறைக்காது

உறைந்திருந்த பனித்துளியை

நீர்த்துளியாக்குகிறது வெயில்..

பச்சை படர்ந்து

உறங்கிக்கொண்டிருந்த மலையை 

புன்னகைக்கவைக்கிறது நீர்த்துளி..

படர்ந்ததூசிகள் பறந்து

அடர்ந்தகாட்டை புதிதாய்

சுவாசிக்கவைக்கிறது காற்று..

புதுகாற்றுடன் தேடிவந்து

கூடடைந்த குஞ்சுகளுக்கு

இரையளிக்கின்றன பறவைகள்..

பாறைகளின் நெஞ்சில்

மென்மையாய் வருடுகின்றன

பசும் புற்கள்..

யாருமற்ற சுவடுகளில்

காலடிச்சத்தம் மீண்டும்..

பைசுமந்த சிறுதோள்கள்

பள்ளி நோக்கி விரைகின்றன..

மழை பெய்த பின்..

மரம் மட்டுமல்ல..

மனிதர்களும் துளிர்க்கிறார்கள்..


-சகா..

03/04/2026